

தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான 151 இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றும்படி உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருப்பது பெரும் விவாதங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.
2025ஆம் ஆண்டு நீட் முதுகலைத் தேர்வு அடிப்படையில் மருத்துவ முனைவர் பட்டம் (டி.எம்.), முதுகலை அறுவைசிகிச்சைப் பட்டம் (எம்.சிஎச்.) ஆகிய உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்குத் தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 430 இடங்கள் இருந்தன.
இவற்றில் தமிழ்நாட்டின் உள் இடஒதுக்கீட்டு முறைப்படி 50% இடங்கள் நிரப்பப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 215 இடங்களில் முதல் சுற்றில் 64 இடங்கள் நிரப்பப்பட்டன.