

இந்தியாவில் மேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடிப்பதற்குள் 73% மாணவர்கள் தேர்வு மன அழுத்தம், பாடப்புத்தகப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணிகளால் படிப்பைக் கைவிடுவதாக நாடாளுமன்றக் குழு தெரிவித்திருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.
இந்தியாவில் பள்ளிக் கல்வி முறையின் தரம், உள்கட்டமைப்பு வசதிகள், இடைநிற்றல் விகிதம் குறித்த 10ஆவது அறிக்கையை நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு அண்மையில் தாக்கல் செய்தது. இதில், பள்ளிக் கல்வித் துறையில் நிலவும் பல முக்கியச் சிக்கல்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளன.
மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்ட ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வித் தகவல் அமைப்பு 2024-25 புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் உள்ள 10.92 லட்சத்துக்கும் அதிகமான அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், பெரும் பாலானவை தொடக்கப் பள்ளிகளே.
அதாவது, தொடக்க நிலையில் 9,11,032 பள்ளிகள் உள்ள நிலையில், மேல்நிலை வகுப்புகள் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை வெறும் 90,866 மட்டுமே. இதேபோல் துளிர் வகுப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர் கல்வி நிலையை எட்டும்போது கடுமையான சரிவைச் சந்திக்கிறது.