

கேரளத்தில் பாம்புக் கடியால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது. அண்மையில், அடுத்தடுத்த மூன்று நாள்களில் 54 பேர் பாம்புக் கடிக்கு உள்ளாகியிருப்பதோடு, ஆறு பேர் உயிரிழந்திருப்பது கேரள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இவ்விஷயத்தில் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய படிப்பினைகளும் இருக்கின்றன. குளிர் ரத்தப் பிராணிகளான பாம்புகள் வெயில் அதிகமாக இருக்கும்போது குளிர்ச்சியான இடங்களைத் தேடிச் செல்கின்றன.
தற்போது கோடைக்காலம் என்பதால், மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் பாம்புகள் தஞ்சமடைந்துவிடுகின்றன. கண்ணாடிவிரியன், நல்ல பாம்பு உள்ளிட்ட விஷப் பாம்புகள் வீட்டின் மூலைகளில் பதுங்கியிருப்பதுடன், சில நேரம் வீட்டில் உள்ளவர்களைக் கடித்துவிடுவதும் நிகழ்கிறது.
உலகில் நிகழும் பாம்புக் கடிகளில் ஏறக்குறைய பாதி அளவு இந்தியாவில்தான் நிகழ்கின்றன. குறிப்பாக, அடர்த்தியான தாவரங்கள் நிறைந்த, மனித-வனவிலங்கு வாழிடங்கள் இயற்கையாகவே அருகருகே அமைந்திருக்கும் கேரளத்தில் பாம்புக் கடி தொடர்பான பிரச்சினைகள் அதிகம்.
விறகுகள், தேங்காய் மட்டைகள் உள்ள வீடுகள், சேமிப்புக் கிடங்குகள் போன்ற இடங்களில் பாம்புகள் நுழைந்து தொல்லை விளைவிக்கின்றன. ஏப்ரல் - மே மாதங்கள் பல விஷப் பாம்புகளுக்கு இனப்பெருக்கக் காலமாகவும் இருப்பதால், பாம்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிடுகிறது.