

எண்ணூர் கழிமுகப் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் இறந்து மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆலைக்கழிவுகள் இதற்குக் காரணமல்ல என்று தமிழகச் சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்திருக்கும் நிலையில், இப்பிரச்சினைக்கான வேரை முழுமையாக அறிந்து உரிய தீர்வு காண வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 15 அன்று, திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் கழிமுகம், கொசஸ்தலை ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய் பகுதிகளில் ஏறக்குறைய 6 – 7 கி.மீ. பரப்பில் மடவை, கிழங்கான் உள்ளிட்ட மீன்கள், இறால்கள், நண்டுகள் இறந்து மிதந்தன.
இது தொடர்பாகத் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நீர்நிலைகளில் மாதிரிகளை எடுத்துச் சோதனை மேற்கொண்டனர்.
மீன்கள் இறந்து கிடந்தது தொடர்பாக, ஆகஸ்ட் 21இல் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
எண்ணூர் கழிமுகப் பகுதியில் வேதி ஆலைகள் வெளியேற்றும் கழிவுகளால் மாசுறுதல் நிகழ்கிறது எனப் பசுமைத் தீர்ப்பாயம் எச்சரித்துள்ளதாக, எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.
இதற்கு விளக்கம் அளித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி.கே.ராஜீவ், இந்த விவகாரத்தில் இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் (Dissolved Oxygen) அளவு 2 மி.கி./லி என்கிற அளவில் இருந்ததே மீன்கள் இறக்கக் காரணம் என்று தெரிவித்தார்.