

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அண்மையில் சமர்ப்பித்த தரவுகளின்படி இந்தியாவில் சாலைப் பள்ளங்களால் ஏற்படும் விபத்துகளால் 2020-2024 காலக்கட்டத்தில் 9,438 பேர் உயிரிழந்துள்ளனர்; 9,670 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய சாலைப் போக்குவரத்தைக் கொண்டுள்ள நாடாக அறியப்படும் இந்தியாவில், சாலைப் பராமரிப்பில் போதுமான கவனம் செலுத்தப்படுகிறதா என்கிற கேள்வியை இது வலுவாக எழுப்பியுள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஏறத்தாழ 66 லட்சம் கி.மீ. சாலைகளைக் கொண்ட இந்தியா, சாலை விபத்துகளால் ஏற்படும் உற்பத்தித் திறன் இழப்பு, மருத்துவச் செலவு, சொத்து சேதம் உள்ளிட்டவற்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆண்டுக்கு 2-3% இழப்பைச் சந்திப்பதாக உலக வங்கியின் மதிப்பீடு ஒன்று தெரிவிக்கிறது.
மேற்சொன்ன ஐந்தாண்டு காலத்தில் சாலைப் பள்ளங்களில் தவறி விழுந்து நேரிடும் விபத்துகளில் சிக்கிப் பலியானோரின் எண்ணிக்கை 53% உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 5,127 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை 612ஆக உள்ளது.