

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் மக்கள் பாதுகாப்பாக இருக்க, முக்கியமான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது மத்திய சுகாதாரத் துறை.
வெப்ப அலை முதல் எல்-நினோவரை பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றுவரும் சூழலில், மத்திய அரசின் இந்த முன்னெடுப்பு பாராட்டத்தக்கது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்சிஆர்பி) தரவுகளின்படி, இந்தியாவில் மின்னல் தாக்குதலுக்கு அடுத்தபடியாக, வானிலை சார்ந்த உயிரிழப்புகளில் முக்கியக் காரணமாக வெப்பமும் வெப்ப அலைகளுமே சுட்டப்படுகின்றன.
2025 பிப்ரவரி - ஜூலை காலக்கட்டத்தில், இந்தியாவில் வெப்பத் தாக்கம் காரணமாக 84 உயிரிழப்புகள் ஏற்பட்டதாகப் பதிவாகியிருக்கிறது. அதேவேளையில், முந்தைய 20 ஆண்டுகால இடைவெளியில், வெப்பத் தாக்கம் காரணமாக 20,615 உயிரிழப்புகள் ஏற்பட்டதாக என்சிஆர்பி முன்னரே தெரிவித்திருந்தது.