

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில், குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டு ஆறு மாதக் குழந்தை உள்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அம்மாநிலத்தின் வணிகத் தலைநகராகக் கருதப்படும் இந்தூர், இந்தியாவின் மிகத் தூய்மையான நகரமாகத் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுவருவது இந்தச் சம்பவத்தின் மிகப் பெரிய முரண்.
இந்தூர் நகர மக்களுக்கான குடிநீர் நர்மதை ஆற்றிலிருந்து விநியோகிக்கப்படுகிறது. கர்கோன் மாவட்டத்தின் ஜாலுத் பகுதியிலிருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டுசெல்லப்படுகிறது. இந்நிலையில், ஏறக்குறைய 15,000 பேர் வசிக்கின்ற / மக்கள் நெருக்கடி நிறைந்த பாகிரத்புரா பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்ததாகவும், அதைப் பருகிய பலர் வயிற்றுப்போக்கு போன்ற உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளானதாகவும் தகவல்கள் வெளியாகின.