

ஓட்டுநர் உரிமம் பெறும் தகுதியை அடையாத இளம்வயதினர், வாகனம் ஓட்டி விபத்துகளில் சிக்குவது அண்மைக் காலமாக அதிகரித்துவருகிறது. திறன்பேசிப் பயன்பாடு இத்தகைய விபத்துகளுக்கான முக்கியக் காரணமாக இருப்பது கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில், டெல்லி துவாரகா பகுதியில் 17 வயதுச் சிறுவன் ஓட்டிவந்த சொகுசு கார் மோதி, இருசக்கர வாகனத்தில் வந்த சாஹில் தனெஷ்ரா (23) என்பவர் உயிரிழந்தார். காரில் வந்த சிறுவன் தனது சகோதரியுடன் சேர்ந்து ‘ரீல்ஸ்’ பதிவுசெய்வதற்காக, வாகனத்தின் வேகத்தை அதிகப்படுத்தியதால் விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, சாஹிலின் தாய் இன்னா மக்கான் அளித்த புகாரின்பேரில் கைதான இச்சிறுவன், இளையோர் கண்காணிப்பகத்தில் அடைக்கப்பட்டார்; ஆனால், 10ஆம் வகுப்புத் தேர்வு எழுதுவதற்காக, அவருக்கு பிப்ரவரி 10இல் இடைக்காலப் பிணை வழங்கப்பட்டது. மார்ச் 9 அன்று அவர் திரும்ப வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது சிறார் நீதி வாரியம்.