

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் (ஓபிசி) கிரீமி லேயர் அந்தஸ்தைத் தீர்மானிக்க, பெற்றோரின் வருமானம் மட்டுமே அடிப்படையாக இருக்க முடியாது என உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
கடந்த 2015இல் குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி அடைந்த ஓபிசி பிரிவினரில் சிலரின் பெற்றோர் பொதுத் துறை நிறுவன ஊழியர்கள் என்பதால், இவர்கள் கிரீமி லேயர் அடிப்படையில் இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தெரிவித்தது. இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆர்.மகாதேவன் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கின்றனர்.
பொதுத் துறை நிறுவனங்கள், குடிமைப் பணி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், அரசு உதவிபெறும் நிறுவனங்கள் ஆகியவற்றில் 27% ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனங்கள் நடைபெற வேண்டும்; மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என 1980இல் மண்டல் ஆணையம் பரிந்துரைத்தது.