

தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு 950 கூடுதல் எம்பிபிஎஸ் இடங்களைத் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரம், மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறவிருப்பதால் 400-க்கும் அதிகமான இடங்கள் தமிழகத்திலிருந்து கைநழுவும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
2023இல் மருத்துவப் படிப்புக்கான இடங்களை அதிகரிக்கத் தமிழக அரசு விடுத்த கோரிக்கையை, தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய வழிகாட்டுதல் ஏற்கவில்லை. ஒரு மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு 10 லட்சம் பேருக்கும் 100 எம்பிபிஎஸ் இடங்கள் மட்டுமே இருக்க வேண்டும்; ஒரு கல்லூரிக்கு 150 இடங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்னும் விதிகள் பிறப்பிக்கப்பட்டன.
ஏறக்குறைய 8 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டில் ஏற்கெனவே 10 ஆயிரத்துக்கும் அதிகமான மருத்துவ இடங்கள் இருந்த நிலையில், புதிய மருத்துவக் கல்லூரிகளையோ, கூடுதல் இடங்களையோ உருவாக்க முடியாத நிலை உருவானது.
இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், மருத்துவப் படிப்புக்கான இடங்களில் உள்ள மக்கள்தொகை அடிப்படையிலான உச்ச வரம்பு விதியைத் தேசிய மருத்துவ ஆணையம் நீக்கியது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்கள் இருக்கும்பட்சத்தில் இடங்களை மேலும் உயர்த்திக்கொள்ளவும் அனுமதி அளித்தது.