

நொய்டாவில் ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது தேசிய அளவில் பேசுபொருள் ஆகியிருக்கிறது. இதையடுத்துச் சில தற்காலிக நடவடிக்கைகளை உத்தரப் பிரதேச அரசு எடுத்திருக்கிறது. இருப்பினும், இது ஊதிய உயர்வைத் தாண்டித் தொழிலாளர்களின் சட்டபூர்வப் பாதுகாப்புக்கான கிளர்ச்சி என்பதை உணர வேண்டும்.
டெல்லி அருகே உத்தரப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் நொய்டா நகரம் நாட்டின் முக்கியத் தொழில் துறை மையம். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் வாகன உதிரிபாகங்கள், விமான உதிரி பாகங்கள், மின் / மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் ரூ.10,000இல் இருந்து ரூ.14,000வரை மாதச் சம்பளம் பெறும் அமைப்புசாராத் தொழிலாளர்கள்; பலர் புலம்பெயர் தொழிலாளர்கள்.
புறநகரில் நெரிசலான குடியிருப்புப் பகுதிகளில் வாழும் இவர்கள், சொற்ப ஊதியத்தால் பல ஆண்டுகளாகத் திண்டாடிவருகின்றனர். கடந்த சில மாதங்களாக நிலவும் எரிவாயுப் பற்றாக்குறையால் ஏற்பட்டிருக்கும் விலைவாசி உயர்வும் இவர்களைப் பாதித்துள்ளது.