

ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு நாடுகளில் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்துவருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகளின் தாக்குதல் தீவிரமடைந்திருப்பதால் அதற்கு எதிர்வினையாக ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியிருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய், எரிவாயுத் தேவைகளுக்கு வளைகுடா நாடுகளைப் பெரிதும் சார்ந்திருக்கும் நாடுகள் நெருக்கடியைச் சந்தித்துவருகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை இதன் உடனடித் தாக்கம் சமையல் எரிவாயு விலையில் எதிரொலித்திருக்கிறது. வீட்டுப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.60 உயர்த்தப்பட்டிருக்கிறது; வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.115 வரை அதிகரித்துள்ளது.
பெங்களூருவில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதால், உணவகங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இதற்கான சமிக்ஞைகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன.