

சென்னையில் உள்ள தனியார் போதை மீட்பு மையத்தில் சேர்க்கப்பட்டவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிர் இழந்திருப்பது வருந்தத்தக்கது. இது போன்ற மையங்களில் சேர்க்கப்படுபவர்கள் சிகிச்சை என்னும் பெயரில் துன்புறுத்தப்படுவதும் உயிரிழப்பதும் மட்டுமல்லாமல், மறுவாழ்வு நடவடிக்கைகள் மீதான நம்பிக்கை யைக் கேள்விக்கு உள்ளாக்கும் என்பதால் இவ்விவகாரத்தில் அரசின் உறுதியான நடவடிக்கை அவசியம்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் (39), செம்பாக்கத்தில் உள்ள தனியார் போதை மீட்பு மையத்தில் அண்மையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். இங்கு 50க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
நான்காவது நாளில் மையத்திலிருந்து அருண்குமார் தப்பிக்க முயன்றதாகவும் பணியாளர் உள்ளிட்ட சிலர் அவரைப் பிடித்துக் கடுமையாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக நிர்வாகிகள் சேலையூர் காவல் நிலையத்தில் தெரிவித்தனர். அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் மையத்தின் பணியாளர் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.