

நேபாளத்தில் ‘ஜென் இசட்’ தலைமுறையினர் கடந்த ஆண்டு நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சியாக, அண்மையில் அந்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் போராட்டக்காரர்களின் ஆதரவு பெற்ற கட்சி ஆட்சியைக் கைப்பற்றியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
முன்னாள் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி கைது செய்யப்பட்டிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், அண்டை நாடான நேபாளத்துடனான உறவைப் பேணுவதில் இந்தியா கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.
2008இல் மன்னராட்சியில் இருந்து மக்களாட்சிக்கு மாறிய நேபாளத்தில், அதன் பின்னர் 14 முறை ஆட்சி மாற்றம் நடந்தது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான கே.பி.ஷர்மா ஒலி, கூட்டணி அமைத்து 2024இல் தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியில் அமர்ந்தார்.
நீண்ட காலமாகவே ஊழல் மீதான அதிருப்தி நிலவி வந்த நிலையில், அரசுக்கு எதிரான கருத்துகள் பகிரப்படுவதைத் தடுக்கும்வகையில் சமூக ஊடகத் தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை கொந்தளிப்பை உருவாக்கியது.