

எந்தவொரு பிரச்சினைக்கும் தன்னைத்தானே தண்டித்துக்கொள்வது ஒரு தீர்வல்ல. காலம்காலமாக ஒலித்துவரும் இந்தக் குரலை மீண்டும் ஒரு முறை எழுப்ப வைத்திருக்கிறது சிவகாசியில் அண்மையில் நிகழ்ந்த ஒரு கல்லூரி மாணவியின் தற்கொலை. இளையோர் மத்தியில் மனநலக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சமூகத்துக்கு இது உணர்த்தியிருக்கிறது.
சிவகாசியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி தனது நண்பருடன் இருக்கிற ஒளிப்படத்தைச் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அந்தத் தகவல் சிலரால் பகிர்ந்துகொள்ளப்பட்டு அலுவலக உதவியாளர் மூலம் கல்லூரி முதல்வரின் பார்வைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக அந்த மாணவியின் தாய் வரவழைக்கப்பட, தாயின் முன்னிலையில் அப்பெண்ணைக் கல்லூரித் தரப்பு கண்டித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் வீடு திரும்பியவுடன் அப்பெண் தனது உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். இதைக் கண்டித்து மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்திய நிலையில், கல்லூரி முதல்வரும் சம்பந்தப்பட்ட பணியாளரும் கைதுசெய்யப்பட்டனர்.