

ஏப்ரல் 7 அன்று மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தின் ட்ராங்லோபி என்கிற கிராமத்தில் நடந்த குண்டுவீச்சுத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மணிப்பூரின் பெரும்பான்மை இந்துச் சமூகமான மெய்தேய் சமூகத்தினரைப் பட்டியல் பழங்குடியினராக அறிவிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மணிப்பூர் பாஜக அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் 2023 மார்ச் 27இல் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து பதற்றச் சூழல் உருவானது.
மே 3இல் மெய்தேய் சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. பல நாள்கள் நீடித்த இந்தக் கலவரத்தில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 60,000க்கும் மேற்பட்டோர் வீடிழந்தனர்.
பல கட்ட முயற்சிக்குப் பின்னர் நிலைமை ஓரளவு சரியானாலும் பதற்றச் சூழல் முழுவதுமாக நீங்கிவிடவில்லை. பல்வேறு விமர்சனங்கள் காரணமாக முதல்வர் பதவியிலிருந்து பிரேன் சிங் விலகிய நிலையில், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, ஏறத்தாழ ஓர் ஆண்டு காலத்துக்குப் பின்னர் பாஜகவின் யும்நாம் கேம்சந்த் தலைமையில், 2026 பிப்ரவரியில் புதிய அரசு அமைந்தது.
இந்நிலையில், பிஷ்ணுபூர் மாவட்டத்தின் ட்ராங்லோபி என்கிற கிராமத்தில் ஏப்ரல் 7 அன்று குண்டுவீச்சுத் தாக்குதல் நடந்தது. அதிகாலை ஒரு மணிக்கு நடந்த இத்தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர்.