

நம்பிக்கையின் பெயரால் ஆற்றை அசுத்தப்படுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் கூறியிருப்பதைச் சமூகத்தின் அனைத்துத் தரப்பும் முதிர்ச்சியோடு அணுக வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் கட்டப்பட்ட ஒரு தனியார் மண்டபத்தை நில ஆக்கிரமிப்புச் சட்டத்தின்படி அகற்றுமாறு தமிழக நீர்வளத் துறை 2024இல் உத்தரவிட்டது. அதை எதிர்த்து மண்டப உரிமையாளர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு அண்மையில் விசாரித்தது. அப்போது, தாமிரபரணியின் இன்றைய யதார்த்த நிலையை உணர்த்தும்வகையில், சில தகவல்களை நீர்வளத் துறை தெரிவித்தது.
நீத்தார் நினைவாகவும் பரிகாரமாகவும் மேற்கொள்ளப்படும் சடங்குகளின் ஒரு பகுதியாக ஆற்றில் ஆடைகள், செருப்புகள், செங்கற்கள் போன்றவை விடப்படுவதாகவும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வரும் நாள்களில், பாபநாசம் தொடங்கி ஆற்றின் கரையோர ஊர்கள் பலவற்றில் இவ்வகை மாசுபாடு நிகழ்வதாகவும் கூறப்பட்டது.