

திரிணமூல் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்களில் ஒருவராகத் தன்பாலின ஆதரவாளரான மேனகா குருசாமி முன்மொழியப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியாவின் முதல் பால் புதுமையர் எம்.பி. என்னும் பெருமையை இவர் பெறுவார்.
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் இந்த முன்னெடுப்பு, அரசியல் செயல்பாடுகளில் சமூகத்தின் அனைத்துப் பிரிவைச் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கிய இந்தியாவின் பன்மைத்துவத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாத்தில் பிறந்தவர் மேனகா குருசாமி. உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான இவர், கல்வி, மனித உரிமைகள், ஒடுக்கப்பட்டோர் நலன், அதிகார மட்டங்களின் குற்றங்கள் போன்றவை சார்ந்த வழக்குகளுக்காக இந்திய அளவில் அறியப்படுபவர்.