

காஞ்சிபுரம் மாவட்டம் மேவலூர்குப்பத்தில் மூன்று வயதுக் குழந்தை கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. சட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் உள்ள அலட்சியம், பெரியவர்களின் கவனக்குறைவு போன்றவற்றுக்கு விலையாகப் பிஞ்சுக் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழக்கும் நிலை இனியும் தொடரக் கூடாது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மேவலூர்குப்பத்தைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி மோகன்ராஜின் மூன்று வயதுக் குழந்தை தர்ஷன், அண்மையில் வீட்டுக்கு முன் விளையாடிக்கொண்டிருந்தபோது அருகில் இருந்த முறையாக மூடப்படாத கழிவுநீர்த் தொட்டியில் தவறுதலாக விழுந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
சுயநினைவின்றிக் கண்டெடுக்கப்பட்ட குழந்தை உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கழிவுநீர்த் தொட்டி பலவீனமாக மூடிவைக்கப்பட்டிருப்பது குறித்து வீட்டு உரிமையாளரிடம் தாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தாலும், அவர் அதைச் சரிசெய்யாமல் விட்டதால்தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் கூறியிருக்கின்றனர்.