

நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த சர்ச்சைகள், முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் போன்றவற்றைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ‘பொதுத் தேர்வு முறைகேடுகள் தடுப்புத் திருத்த மசோதா - 2026’ நம்பிக்கை அளிக்கிறது.
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கும், அரசு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும் கோடிக்கணக்கானோர் போட்டியிடுகிறார்கள். உலகின் மிகப் பெரிய போட்டித் தேர்வுகளை இந்தியா நடத்திவருகிறது.
இந்தச் சூழலில், கடந்த சில ஆண்டுகளாகப் போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதாகவும் வினாத்தாள்கள் கசிவதாகவும் புகார்கள் எழுந்தன. பொதுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் அல்லது குற்றங்களைக் கையாள்வதற்கு என்று வலுவான சட்டம் எதுவும் இல்லாததும் பேசுபொருளானது.
இதையடுத்து, 2024இல் பொதுத் தேர்வுகள் (முறையற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டம், 2024 கொண்டுவரப்பட்டது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), பணியாளர் தேர்வாணையம் (SSC), ரயில்வே / வங்கிப் பணித் தேர்வுகள், தேசியத் தேர்வுகள் முகமை (NTA) உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும் பொதுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுப்பது இச்சட்டத்தின் நோக்கம்.