

திருநெல்வேலியில் நான்கு சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மதபோதகருக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. மனசாட்சியற்றுச் சிறார்கள் மீது நிகழ்த்தப்படும் கொடூரமான பாலியல் குற்றத்துக்கு எதிராகச் சமூகத்தின் கூட்டு உணர்வை வெளிப்படுத்தும் விதமாக இத்தண்டனை அமைந்திருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே மேல இலந்தைக்குளத்தில் மதபோதகர் ஆபிரகாம் என்பவர் பிரார்த்தனைக்கூடத்தை நடந்திவந்தார். 2020 – 2022 கரோனா காலத்தில் ஊழியம், நன்னெறி வகுப்புகள் எடுப்பதாகக் கூறிச் சிறாரை வெளியூர்களுக்கு அழைத்துச் சென்றுவந்திருக்கிறார்.
அவர்களில் நான்கு சிறுமிகளிடம் ஆபிரகாம் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் 2022 ஜூலையில் ஆபிரகாம் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில்தான் தற்போது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது; பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.