முதியோர் நலனுக்கு முன்னுரிமை அளிப்போம்!
இந்தியாவில் 60 வயதைக் கடந்த மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 2011 நிலவரப்படி 10 கோடியாக இருந்த நிலையில், 2036இல் அது இரண்டு மடங்கு அதிகரித்து 23 கோடியைத் தொடும் என மக்கள்தொகைக் கணிப்பு அறிக்கையில் (Technical Group on Population Projections) கூறப்பட்டுள்ளது.
இதன்படி, 10 ஆண்டுகள் கழித்து இந்திய மக்கள்தொகையில் 15 சதவீதத்தினர் அதாவது, ஏழு பேரில் ஒருவர் 60 வயதைக் கடந்தவராக இருக்கும் நிலை ஏற்படும்.
அதேபோல, சுகாதாரம் - குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில் வயது முதிர்வு குறித்து எடுக்கப்பட்ட நீண்டகால ஆய்வின்படி, 2050இல் இந்தியாவில் முதியோரின் எண்ணிக்கை 31 கோடியாக உயரும் எனத் தெரியவந்துள்ளது.
இந்த அசாதாரண உயர்வு, முதியோருக்கான சமூகப் பாதுகாப்பு வாழ்வாதார உரிமைகள், மருத்துவச் சேவை, நலத்திட்டங்கள் போன்றவற்றின் அவசியத்தை உணர்த்தியிருக்கிறது.
ஒருபக்கம் நாட்டின் மொத்தக் கருவள விகிதம் குறைந்திருக்கும் நிலையில், மறுபக்கம் முதியோர் எண்ணிக்கை உயர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது.
வயதுவாரியான மக்கள்தொகையில் சமச்சீரின்மை நிலவும் அதேநேரம், மூத்த குடிமக்களின் எண்ணிக்கை உயர்வும் நாடு முழுவதும் சீராக இல்லை.
