

மாணவர்களின் மனநலனைப் பாதுகாக்கும் வகையில் நாடு முழுவதும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர்களுக்கான மனநலக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களுக்கான மனநலக் கொள்கை அண்மையில் வெளியிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
2023இல் விசாகப்பட்டினத்தில், நீட் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி தற்கொலை செய்துகொண்டது தொடர்பான வழக்கில், மனநலன் என்பது மாணவர்களின் அடிப்படை உரிமையான வாழ்வுரிமையின் ஒருங்கிணைந்த கூறு என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
அரசு - தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி நிறுவனங்கள், விடுதிகள் உள்ளிட்ட அனைத்து விதமான கல்வி நிறுவனங்களிலும் மாணவர்களின் மன நலப் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது; கல்வி நிறுவனங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய 15 உத்தரவுகளையும் வெளியிட்டது.
பெரும்பாலான குடும்பங்களில் தாய், தந்தை இருவருமே வேலைக்குப் போக வேண்டிய கட்டாயத்தால் பிள்ளைகள் பள்ளி - கல்லூரி நேரம் போகத் தனித்துவிடப்படுகின்றனர். குழந்தைகளின் மனநலப் பராமரிப்பில் பெற்றோரால் போதிய அளவுக்குக் கவனம் செலுத்த முடிவதில்லை.