

உலகின் மிகப் பெரிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பாகக் கருதப்படும் இந்தியாவின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நேற்று (ஏப்ரல் 1) முதல் தொடங்கியிருக்கிறது. ஐந்து ஆண்டுகள் தாமதமாக நடைபெறும் இந்தக் கணக்கெடுப்பு, கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார மாற்றங்களை உணர்த்தும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் 1881 முதலே மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வந்திருக்கிறது. சுதந்திர இந்தியாவில் ஏழு முறை மக்கள்தொகைக் கணக்கெடுப்புகள் நடைபெற்றுள்ளன. கடைசியாக, 2011இல் கணக்கெடுப்பு நடைபெற்றது.
எட்டாவது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2021இல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், கரோனா பெருந்தொற்று ஒரு தடையாக இருந்தது. 2022இலேயே பெருந்தொற்று ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்கு வந்த நிலையிலும் கணக்கெடுப்பு நடைபெறாதது விமர்சனத்துக்கு வழிவகுத்தது.