

நாடு முழுவதும் நடப்புக் கல்வியாண்டில் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதாகவும், 950 பாடப்பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு தெரிவித்திருப்பது, உயர் கல்வி நிறுவனங்களின் தரம் குறித்த கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
2025 – 26 கல்வியாண்டில் 58 பொறியியல் கல்லூரிகள் படிப்படியாக மூடப்படும் என்று அண்மையில் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி குழு (AICTE) தெரிவித்தது.
அந்தக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி இல்லை என்றும், தற்போது பயின்றுவரும் மாணவர்கள் எந்தவித இடையூறும் இன்றிப் படிப்பை நிறைவுசெய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் விளக்கம் அளித்தது.
அவற்றில் மூன்று கல்லூரிகள் அரசு உதவி பெறுபவை, மற்றவை தனியார் கல்லூரிகள். அதிகபட்சமாக உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரத்தில் தலா 12 கல்லூரிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் இரண்டு கல்லூரிகள் மூடப்பட இருக்கின்றன. இதேபோன்று சில பொறியியல் கல்லூரிகளில் 950 படிப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும் ஏஐசிடிஇ கூறியுள்ளது.