

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தின் மீது மார்ச் 16 அன்று இரவு, பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவம், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.
ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் நீண்ட காலமாக நட்பு நாடுகளாக இருந்தவை. 1996இல் தாலிபான் அமைப்பின் தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர் இரு தரப்பு உறவு இன்னும் நெருக்கமானது.
பாகிஸ்தானின் உளவுத் துறை, ஆப்கானிஸ்தான் தாலிபான்களை உருவாக்க உதவியது. தாலிபான் ஆட்சியில் ராணுவத் தளவாடங்களை உருவாக்குவது முதல் ராணுவத்தினருக்குப் பயிற்சி அளிப்பதுவரை பாகிஸ்தானின் பங்களிப்பு கணிசமானது.
2001 செப்டம்பர் 11இல் அமெரிக்காவில் அல்கொய்தா அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு தொடங்கப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர், ஆப்கன் விவகாரத்தில் பாகிஸ்தான் நிலைப்பாட்டை மாற்றியது.