

தமிழகத்தில் அரிசி விலை அதிகரித்துவருவதும், அது மேலும் உயரக்கூடும் என்று தகவல்கள் வெளியாவதும் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன. உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய முக்கியப் பிரச்சினை இது.
தமிழகத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடையாகும் நெல், பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமுள்ள தேவைக்காக ஆந்திரம், கர்நாடகத்தில் இருந்து பாபட்லா, கர்நாடகப் பொன்னி ரகங்கள் பெறப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக, தமிழகத்தில் மேற்குறிப்பிட்ட அரிசி ரகங்களின் விலை கிலோவுக்கு ரூ.15 முதல் 30 வரை அதிகமாகியுள்ளது. ஆறு மாதங்களுக்கு முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் ‘டீலக்ஸ்’, ‘ஆர்என்ஆர்’ புழுங்கல் அரிசியின் விலை 20% அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதற்கு ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து அரிசி வரத்து குறைந்ததே காரணம் எனப்படுகிறது.
எல் நினோ காரணமாக மழைப்பொழிவு 51% குறைந்துள்ளதாகத் தெரிவித்திருக்கும் ஆந்திர அரசு, அடுத்த ஆண்டு ஜூன் வரை மக்களின் குடிநீர்த் தேவைக்கு முக்கியத்துவம் தர வேண்டியிருப்பதால் ஆலமட்டி, நாராயண்பூர், துங்கபத்ரா அணைக்கட்டுப் பகுதி விவசாயிகளிடம் நெல் பயிரிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த ஆண்டு மழை பொய்த்திருப்பதாகக் கர்நாடக அரசு கூறிவருகிறது. இதன் தொடர்ச்சியாக மேட்டூர் அணையில் நீர் திறந்துவிடப்படாததால் தமிழகமும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறது.