

இந்தியாவில் உயர் ரத்த அழுத்தம் தற்போது இளைஞர்களிடம் வேகமாகப் பரவிவருகிறது என டெல்லியில் அண்மையில் நடைபெற்ற ‘உயர் ரத்த அழுத்தச் சிகிச்சையை மாற்றுதல்: நோயிலிருந்து நல்வாழ்வு’ மாநாட்டில் மருத்துவர்கள் எச்சரித்திருக்கின்றனர்.
தொடக்கத்திலேயே கண்டறிந்து தீர்வு காண வேண்டிய பிரச்சினை இது. உலக உயர் ரத்த அழுத்த நாளை (மே 17) முன்னிட்டு ‘நோயிலிருந்து நல்வாழ்வு’ மாநாடு டெல்லியில் மே 15 அன்று நடைபெற்றது.
இம்மாநாட்டில் மத்திய ஆயுஷ், சுகாதாரத் துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் பேசும்போது, மாறிவரும் வாழ்க்கை முறை, உடல், மன ஆரோக்கியத்தில் காட்டும் அலட்சியத்தால் இளைஞர்களிடையே உயர் ரத்த அழுத்தம் மிக வேகமாக அதிகரித்துவருகிறது என எச்சரித்தார்.
பெருநகரவாசிகளைப் போலவே கிராமப்புற மக்களையும் பாதிக்கும் நோயாக இது மாறியுள்ளதும் மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டது. மாநாட்டில் பங்கேற்ற மருத்துவ நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், சுகாதாரச் செயல்பாட்டாளர்கள் உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுப்பதற்கான உத்திகள், முழுமையான அணுகுமுறைகள் குறித்து விவாதித்தனர்.