

நீண்ட அனுபவம் உள்ளதால் தங்களைக் கள உதவியாளர்களாகப் பதவி உயர்த்த வேண்டும் எனத் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கேங்மேன்கள் அண்மையில் நடத்திய போராட்டம் பேசுபொருள் ஆகியிருக்கிறது. கடுமையான பணியாளர் பற்றாக்குறையால் கூடுதல் வேலைகளைச் செய்துவரும் கேங்மேன்களின் கோரிக்கைக்கு அரசு செவிமடுக்க வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 9,613 கேங்மேன்கள் பணிபுரிந்து வருகின்றனர். மின்கம்பம் நடுதல், மின்கம்பி இழுப்பது, மின் பாதைகளைச் சீரமைப்பது போன்றவற்றில் வயர்மேன், லைன் இன்ஸ்பெக்டர் போன்றவர்களுக்கு உதவுவதே இவர்களது வேலை. சில தினக்கூலிப் பணியாளர்களும் இவர்களுக்குத் துணையாக இருப்பார்கள்.
ஆனால் பணியாளர் பற்றாக்குறை காரணமாகக் கடுமையான வேலைப்பளுவை கேங்மேன்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இவர்கள் மட்டுமே அனைத்துவிதமான வேலைகளையும் செய்வதுதான் பல இடங்களில் கள நிலவரமாக உள்ளது. ஏறக்குறைய 40 ஆயிரம் கேங்மேன்கள் தேவைப்படும் சூழலில், தற்போதைய எண்ணிக்கை மிகவும் குறைவு எனப்படுகிறது.