

திருமணம் உள்ளிட்ட வாக்குறுதிகளைக் கொடுத்து ஒரு பெண்ணுடன் உறவு கொண்ட பிறகு திருமணம் புரிய மறுப்பது, ‘பாரதிய நியாய சன்ஹிதா’ பிரிவு 69இன்படி குற்றச்செயல் என்கிறபோதும், ஒருவரைக் குற்றவாளி ஆக்குவதற்கான கருவியாக மனமொத்த உறவைப் பயன்படுத்த இயலாது என கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு, சிக்கலான வழக்குகளை நுண்ணுணர்வோடு அணுக வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இருக்கிறது.
ஒரு வழக்கறிஞருக்கு எதிராகப் பெண் ஒருவர் தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி எம்.நாகபிரசன்னா, “போலியான வாக்குறுதி அளித்த வஞ்சகச் செயலைத்தான் சட்டம் தண்டிக்கும், ஏமாற்றத்தை அல்ல. சட்ட விரோதமான செயலையும் சுரண்டலையும்தான் தண்டிக்குமே தவிர, உறவு முறிவை அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய பெண் ஏற்கெனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர் எனவும் அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிற நிலையில், இருவருக்கும் இடையே போலியான திருமண வாக்குறுதியின் அடிப்படையில் நிகழ்ந்த உறவாக, இதைக் கருத முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.