

வடகிழக்கு மாநிலமான மேகாலயத்தின் கிழக்கு ஜெய்ன்டியா மலைகள் மாவட்டத்தில் செயல்பட்டுவந்த சட்ட விரோத நிலக்கரிச் சுரங்கத்தில் பிப். 6 அன்று நிகழ்ந்த வெடிவிபத்தில் 31 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சட்ட விரோதமாகச் செயல்படும் இதுபோன்ற சுரங்கங்களில் நடைபெறும் விபத்துகள் அரசு நிர்வாகத்தின் தோல்வியை வெளிப்படுத்துகின்றன.
உம்சங்காட் என்கிற கிராமத்தில் உள்ள தாங்ஸ்கு பகுதியில் இயங்கிவந்த இந்தச் சட்ட விரோதச் சுரங்கத்தில், டைனமைட் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி நிலக்கரி எடுக்கும்போது இந்த விபத்து நேரிட்டிருக்கிறது. உயிரிழந்தவர்களுக்கான நிவாரணங்களை மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருக்கின்றன.
சட்ட விரோதச் சுரங்க உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேகாலய முதலமைச்சர் கான்ராட் சங்மா தெரிவித்திருக்கிறார். ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எஸ்.சௌகான் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கவும் சிறப்புப் புலனாய்வு விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு விபத்து நேர்ந்த பிறகு, அரசு எடுக்கும் வழக்கமான நடவடிக்கையே இது.