

தேர்தல்களில் பண விநியோகம் பெரும் சவாலாகத் திகழ்வதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பது மிகவும் கவனத்துக்குரியது. கடந்த 20 ஆண்டுகளாகப் பணப் பட்டுவாடா குறித்த புகார்கள் பெருகிவருவது கவலை அளிப்பதாக உள்ளது.
மறுபுறம், அரசியல் கட்சிகளின் பண விநியோகத்தைத் தடுப்பது உள்ளிட்ட நோக்கங்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் தேர்தல் நடத்தை விதிகள், சில நேரம் மக்களுக்கு இடையூறாக இருப்பதையும் பரிசீலிக்க வேண்டும்.
தமிழகம், கேரளம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பை மார்ச் 15இல் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அடுத்த நொடியே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன; தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைகள் தொடங்கின. மார்ச் 15 முதல் 26ஆம் தேதி வரை தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டவற்றின் மதிப்பு ரூ.189 கோடி.
ரூ.10,000க்கும் மேற்பட்ட மதிப்பிலான பொருள்கள், ரூ.50,000க்கும் மேலான ரொக்கத்தை எடுத்துவருபவர்கள் உரிய ஆவணங்கள், ரசீதுகளைக் கொண்டுவர வேண்டும் என்று அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
இந்த நடைமுறையால் அத்தியாவசியச் செலவுகளை மேற்கொள்வது தடைபடுவதாகவும் வணிகம் மட்டுமல்லாமல் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட தேவைகள் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் குரல்கள் ஒலிக்கின்றன.