

எம்பிபிஎஸ் படிப்புக்கு நாலரை ஆண்டுகளுக்கு மட்டுமே கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என மருத்துவக் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் கல்லூரி நிர்வாகங்களால் சுரண்டலுக்கு உள்ளாகும் மாணவர்களுக்கு இந்த நடவடிக்கை உதவும். அதே நேரத்தில், ஒழுங்கு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் தொடர்ச்சியாக இருந்துவரும் இடைவெளிகளும் சரிசெய்யப்பட வேண்டும்.
தேசிய அளவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஓராண்டுக்கு ரூ.10,000 தொடங்கி ரூ.2,50,000 வரையும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர்பவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.8 லட்சம் வரையும் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்பவர்களுக்கு ஆண்டுக்கு ஏறக்குறைய
ரூ.25 லட்சமும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்தும் அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம் கல்விக் கட்டணம் தொடர்பாகச் சில விதிமுறைகளை வகுத்துள்ளது.
தேசிய மருத்துவ ஆணையச் சட்டம்-2019, இளங்கலை மருத்துவக் கல்வி ஒழுங்குமுறைகள்-2024 ஆகியவற்றின்படி, வகுப்புகள் நடைபெறும் நாலரை ஆண்டுகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.