

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடைபெறும் காவல் மரணங்கள் வேதனை அளிக்கின்றன. இத்தகைய சம்பவங்களால் மக்கள் மத்தியில் காவல் துறையினர் மீதான நம்பிக்கை குலைவதை அனுமதிக்கக் கூடாது.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைத் தனது கடையில் வைத்திருந்ததாகத் தென் தாமரைக்குளம் காவல் நிலையத்தினரால் ஜூலை 9 அன்று கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட அவர், சில நாள்களில் உயிரிழந்தார். சிறையில் வழுக்கி விழுந்ததால் மாரடைப்புக்கு உள்ளாகி, அவர் இறந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால், சிறைக்குள் அவர் அடித்துக்கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.