

நாடு முழுவதும் நுகர்வோர் நல வழக்குகளைத் தீர்ப்பதில் நிலவும் பெரும் தாமதம் குறித்து உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து வழக்குப் பதிவுசெய்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தக் கட்டமைப்பிலும் உள்ள பிரச்சினைகளைச் சரிசெய்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
மக்கள் விலைகொடுத்து வாங்கும் பொருள் அல்லது சேவை, போதிய தரமின்றி இருப்பின், அவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்காக 1986இல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. டெல்லியில் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையமும் மாநில அளவிலான ஆணையங்களும் மாவட்ட அளவிலான ஆணையங்களும் உருவாக்கப்பட்டன.
இந்தச் சூழலில், நுகர்வோர் வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பது குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்குப் பதிவுசெய்தது.
இதுதொடர்பான விசாரணை ஆகஸ்ட் 13இல் நடைபெற்றது. அப்போது, தேசிய அளவிலான ஆணையத்தில் பல வழக்குகள் எட்டு ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதைக் குறிப்பிட்டு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
தேசிய ஆணையத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை, சராசரியாக ஒரு வழக்கை முடிக்க ஆகும் காலம், தேவையான பணியாளர்களின் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி ஆணையத் தலைவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.