

தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் (வன் தட்டுகள்) திருடப்பட்ட சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அவை திரும்பப் பெறப்பட்டுவிட்டாலும், ஏற்கெனவே ஊழல் குறித்த விசாரணை நடைபெற்றுவரும் சூழலில், ஆதாரங்களை அழிப்பதற்கான வாய்ப்புகளை இந்தத் திருட்டு ஏற்படுத்திவிடக் கூடாது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் செயல்பட்டுவருகிறது. இதன் கணினிப் பிரிவில் 18 ஹார்டு டிஸ்க்குகள் மே மாதத்தில் திருடப்பட்டுவிட்டதாக மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அண்மையில் கூறினார். மே 16, 17இல் இந்தத் திருட்டு நடந்ததாகக் கூறப்படுகிறது.
மின்சாரம், நிலக்கரி போன்றவற்றைக் கொள்முதல் செய்வதிலும் பதவி உயர்வு, இடமாறுதல் அளிப்பதிலும் ஊழல் நடப்பதாகத் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக, 2021-2023இல் மின்மாற்றி (டிரான்ஸ்ஃபார்மர்) கொள்முதல் செய்யப்பட்டதில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
தற்போது இந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்துவரும் நிலையில், ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டதை எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது. இதற்கிடையே சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தினர், கோபிநாத், முரளிமனோகர் ஆகிய இருவரைக் கைதுசெய்து, பெங்களூருவிலிருந்து ஹார்டு டிஸ்க்குகளை மீட்டனர்.