

இந்தியாவில் மாவோயிஸ்ட் / நக்சலைட் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருப்பது பெரும் நிம்மதி அளிக்கிறது.
இதனால், ஏராளமான உயிரிழப்புகளுக்கு முடிவு கட்டப்பட்டிருப்பதுடன், பல்வேறு முட்டுக்கட்டைகளுக்கு இலக்காகியிருந்த பழங்குடிக் கிராமங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்னும் நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாக பிஹார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களின் 200க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நக்சலைட் பிரச்சினை நீடித்துவந்தது.
பழங்குடி மக்கள் வசிக்கும் மலைப் பகுதிகள் / காட்டுப் பகுதிகள், கனிம வளம் நிறைந்த பகுதிகளில் நீடித்த இந்தப் பிரச்சினையால் அப்பகுதி மக்களின் கல்வி, அடிப்படை வசதிகள் தொடங்கி, அந்தந்த மாநிலங்களின் வளர்ச்சிப் பணிகள்வரை பல அம்சங்களில் பாதிப்பு ஏற்பட்டது.
பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதாக ஆயுதம் ஏந்தி வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுவந்த நக்சலைட்டுகள் சித்தாந்தரீதியில் பல்வேறு தொடர்புகளைக் கொண்டவர்கள் என்பதால், தீர்வு காண்பதில் பல்வேறு இடர்ப்பாடுகளும் நீடித்தன.