

பள்ளி ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் மனநலப் பயிற்சி வழங்குவதை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கட்டாயமாக்கி இருப்பது வரவேற்கத்தக்கது.
மன அழுத்தம், பதற்றம் முதலான உளவியல் சிக்கல்கள், கல்வி அழுத்தம், எதிர்காலப் பணி குறித்த அச்சம் போன்றவை இன்றைய மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன.
இவற்றுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, 2025 ஜூலை மாதம், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராஜஸ்தான் மேல்நிலைப் பள்ளி வாரியம், சிபிஎஸ்இ, யுஜிசி, ராஜஸ்தான் மாநில அரசு ஆகியவை இதுகுறித்து எதிர்வினை ஆற்றும்படி உத்தரவிட்டது.
இதையடுத்து, அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் உளவியல், தொழில் ஆலோசகர்களைக் கட்டாயம் நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. அதற்கான விதிகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் கடந்த ஜனவரியில் வெளியிட்டது.