

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 2026-27 கல்வியாண்டில் 5 லட்சம் மாணவர்களை இணைக்க இலக்கு நிர்ணயித்து, மாணவர் சேர்க்கையைத் தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியது. பொதுவாக, அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை, கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் நாளில்தான் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும்.
இந்தச் சூழலில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் கடந்த 2024லிருந்து மார்ச் மாதமே சேர்க்கை தொடங்கப்படுகிறது. அந்த வகையில் 2026-27 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்டது. இதையொட்டி, தனியார் பள்ளிகளுக்குப் பெற்றோர் செல்லும் முன்னர் அருகமை அரசுப் பள்ளிகளை நோக்கி ஈர்க்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
புதிதாக 50க்கும் மேற்பட்ட மாணவர்களைச் சேர்க்கக்கூடிய அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது ஓர் எடுத்துக்காட்டு. ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளிட்ட புதிய வசதிகள், மாணவர் நலத்திட்டங்கள் குறித்துப் பெற்றோருக்கு எடுத்துச்சொல்லும் விழிப்புணர்வு முகாம்களும் திட்டமிடப்பட்டுள்ளன.