

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்ட காவல் துறையைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருக்கிறது. காவல் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்கிற எண்ணத்தை வலுப்படுத்தும் என்கிற வகையில் இந்தத் தீர்ப்பு பெரிதும் வரவேற்கத்தக்கது.
கரோனா காலத்தில் 2020 ஜூன் 19ஆம் தேதியன்று சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்களால் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில், அந்தக் காவல் நிலையத்தைச் சேர்ந்த 10 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு, வழக்கு தொடர்பான தகவல்கள் அமர்வு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இதற்கிடையே ஒருவர் கரோனா தொற்றில் உயிரிழந்தார்.