Published : 28 Dec 2021 07:21 AM
Last Updated : 28 Dec 2021 07:21 AM

கைத்தறி நெசவாளர்களை ஆதரிக்குமா அரசு?

கரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்தியா முழுவதும் அனைத்துத் தொழில் துறைகளுமே பாதிக்கப்பட்டிருந்தாலும், கைத்தறி நெசவாளர்கள் மற்ற எல்லோரையும் விட மிக மோசமான நிலைக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பெருந்தொற்று மட்டுமின்றி எதிர்பாராத பெருமழைகளின் காரணமாகவும் கைத்தறி நெசவுத் தொழில் கடும் சவால்களைச் சந்தித்துள்ளது.

கைத்தறி நெசவாளர்கள் தங்களது தொழிலைக் கைவிட்டு, வேறு தொழில்களுக்கு மாற ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு மற்ற துறைகளிலும் உடனடி வேலைவாய்ப்புகளுக்கு எந்த உறுதியும் இல்லை. குறிப்பாக, தமிழ்நாட்டில் விவசாயத்துக்கு அடுத்தபடியாகக் கைத்தறி நெசவுத் துறைதான் அதிகளவில் வேலைவாய்ப்புகளைத் தரும் துறையாக உள்ளது. இந்நிலையில், கைத்தறி நெசவாளர்களைக் காக்க வேண்டிய பெரும்பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்பதை அரசுக் கொள்கைகளை ஆராயும் ஆய்வு நிறுவனங்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன.

அரசுக் கொள்கைகள் மற்றும் மேம்பாட்டு ஆய்வு மையம்(சிபிடிஎஸ்) என்ற ஆய்வு நிறுவனம், சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்றில், பள்ளிக் குழந்தைகளுக்கான சீருடைகள் கைத்தறியில் தைக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதன் மூலமாக, தமிழ்நாட்டில் உள்ள 2.5 லட்சம் கைத்தறி நெசவாளர்கள் பயனடைவார்கள் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் தொடக்கப் பள்ளி தொடங்கி மேனிலைப்பள்ளி வரையில் பள்ளி செல்லும் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய 1.25 கோடி. இந்த மதிப்பீட்டின் அடிப்படையிலேயே நெசவாளர்களை ஆதரிக்கும்வகையில் கைத்தறிச் சீருடைகள் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

பள்ளிச் சீருடைக்குக் கைத்தறியைக் கட்டாயமாக்கினால், அதற்கான தேவை அதிகரிக்கும் என்ற நோக்கிலேயே இத்தகைய ஆலோசனைகள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால், சீருடைகள் ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் ஒவ்வொரு வகுப்புக்கும் வெவ்வேறு நிறங்களில், வெவ்வேறு வடிவமைப்புகளில் பின்பற்றப்பட்டுவருகின்றன. அந்த உடனடித் தேவையைக் கைத்தறி நெசவாளர்களால் நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. அதே நேரத்தில், கைத்தறி நெசவாளர்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியையும் அதிலிருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையையும் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு முன்கூட்டியே உணராமலும் இல்லை.

கடந்த ஜூலை மாதத்திலேயே கைத்தறித் துறை ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள் வாரம் இருநாட்கள் கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும் என்ற அறிவுறுத்தலை வழங்கினார். முதல்வரின் நோக்கத்தை அரசு ஊழியர்கள் தாமாகவே முன்வந்து நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கலாம். இன்னும் அது சிலரின் தனிப்பட்ட தேர்வாகவே தொடர்கிறது.

வாரத்தில் குறைந்தபட்சம் ஒருசில நாட்களிலாவது கைத்தறி ஆடைகள் அணிவதைப் பின்பற்றுமாறு துறைசார்ந்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டாலொழிய அது அனைவராலும் கடைப்பிடிக்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது. கல்லூரிகளில் நடக்கும் விழாக்களில் மாணவர்களே விரும்பி கைத்தறி அணிவதையும் பார்க்க முடிகிறது. மஞ்சப்பை இயக்கம்போல, கைத்தறி ஆடை அணிவதும் ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டிய தேவை உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x