Published : 23 Dec 2021 07:22 AM
Last Updated : 23 Dec 2021 07:22 AM

இந்திய மீனவர்களை இலங்கை சிறைபிடிப்பது இனிமேலும் நீடிக்கக் கூடாது

ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 55 மீனவர்களும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 மீனவர்களும் இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டிருப்பது மீனவர்களிடையே மீண்டும் ஒரு பதற்றத்தை உருவாக்கியுள்ளது. கைதுசெய்யப்பட்ட மீனவர்களுடன் அவர்களது 10 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொல்வது, தாக்குதல் நடத்துவது, சிறைபிடிப்பது, அவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்வது ஆகியவற்றைத் தொடர்ந்து செய்துவருகிறது. இலங்கையின் இந்த அணுகுமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.

இரு நாடுகளுக்கும் இடையில் இது தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன என்றபோதும் மீனவர்களைச் சிறைபிடிக்கும் இலங்கையின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை. அருகருகே உள்ள நாடுகளின் கடற்பரப்பில் கடல் எல்லையை அனுமானிக்க முடியாமலேயே பெரிதும் மீனவர்கள் எல்லையைக் கடக்கின்றனர். பயன்படுத்தப்படும் மீன்பிடிச் சாதனங்கள் குறித்து குற்றச்சாட்டுகள் இருந்தாலும் மீனவர்களின் எல்லை மீறல் மீன்பிடிப்பதற்காகவே என்பதும் அதில் நாடுகளின் பாதுகாப்பு சார்ந்து சிக்கல்கள் எதுவும் இல்லை என்பதும் இரு நாடுகளுக்குமே தெளிவாகத் தெரியும். இந்த நிலையிலும், சிறைபிடிக்கப்படும் மீனவர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்பதைக்கூட இந்திய அரசால் வலியுறுத்த முடியாதா என்ற கேள்விக்குப் பதிலில்லை.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் தாங்கள் இந்திய மீனவர்களாகக் கருதப்படவில்லை என்ற மனக்குறையையும் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். குஜராத் மீனவர் பாகிஸ்தான் கடற்படையால் தாக்கப்பட்டால் உடனடியாக அந்நாட்டுத் தூதரை அழைத்துக் கண்டனத்தைத் தெரிவிக்கும் மத்திய அரசு, தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படும்போது ஏன் அவ்வாறு கண்டனத்தைத் தெரிவிக்கவில்லை என்ற கேள்வியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழுப்பியுள்ளார்.

மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதை அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர முயன்றார் விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினரான ரவிக்குமார். அவரது தீர்மான அறிவிக்கையில், 2021-ல் மட்டும் இலங்கைக் கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது 19 முறை தாக்குதல் நடத்தியுள்ளதையும் 5 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையும் 73 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ்நாடு முதல்வர் கடிதம் எழுதுவதும் தொலைபேசியில் வேண்டுகோள் விடுப்பதும் மட்டுமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வளிக்காது; முதல்வரின் டெல்லி பயணங்களின்போது அயலுறவுத் துறை அமைச்சரையும் அதிகாரிகளையும் சந்தித்து அழுத்தம் கொடுப்பதோடு நாடாளுமன்றத்திலும் தமிழ்நாட்டின் குரலை எதிரொலிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.

இலங்கையால் சிறைவைக்கப்பட்டிருக்கும் மீனவர்களைச் சந்தித்துள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் அவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுத்துவருவதாகத் தெரிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. எனினும், இந்தியத் தமிழ் மீனவர்களை இலங்கை சிறைபிடிப்பது இனிமேலும் தொடராத வகையில், இரு நாடுகளுக்கும் இடையே கருத்தொற்றுமையை உருவாக்க வேண்டியது உடனடி அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x