Published : 29 Jul 2021 03:12 AM
Last Updated : 29 Jul 2021 03:12 AM

வருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே சுமத்துவது நியாயமா?

வருமான வரி தினத்தையொட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரையொன்றில், நாட்டின் வளர்ச்சிக்காக நேர்மையாக வரி செலுத்தும் ஒவ்வொருவருடைய பங்களிப்பையும் பாராட்டியிருந்தார். மேலும், அவர்களை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளை வருமான வரித் துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார். மத்திய நிதியமைச்சரின் இந்த அறிவுறுத்தல் உடனடியாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

நேரடி வரிவிதிப்பு முறையின் பாதுகாப்புச் சுவராக மாதாந்திர ஊதியம் பெறுபவர்களே இருக்கிறார்கள். கடந்த நிதியாண்டில், கார்ப்பரேட் வரி வசூல் முற்றிலுமாகச் சீர்குலைந்து போனாலும், வருமான வரி வசூல் நிலையாகவே இருந்தது. தனிநபர் வருமான வரி மட்டும் ரூ.4.71 லட்சம் கோடி வசூலானது. இந்த நூற்றாண்டிலேயே கடந்த நிதியாண்டில்தான் முதன்முறையாக கார்ப்பரேட் வரிகளைக் காட்டிலும் தனிநபர் வருமான வரி அதிகமாக வசூலாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டில் 6.54 கோடிப் பேர் தங்களது வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல்செய்தனர். இந்தியாவில் வயதுவந்தோர் எண்ணிக்கையில் இவர்களது விகிதம் 10%-க்கும் குறைவானதாகும். கணக்கு தாக்கல் செய்பவர்கள் அனைவருமே வரி செலுத்துபவர்களும் இல்லை. தணிக்கை, சட்டம், மருத்துவம் ஆகிய துறைகளைச் சேர்ந்த சுதந்திரமாகத் தொழில்செய்யும் பிரிவினரின் வரிப் பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. பெருவணிகர்கள் தங்களது வருமானத்தைக் குறைவாகக் காட்டவே விரும்புகின்றனர். எனவே, இந்தியாவில் தனிநபர் வருமான வரி என்பது பெரிதும் மாதாந்திர ஊதியம் பெறும் வர்க்கத்தினரையே குறிக்கிறது.

பெருந்தொற்றின் பொருளாதாரப் பாதிப்புகள் காரணமாக மாதாந்திர ஊதிய வர்க்கத்தினரில் பெரும் பகுதியினர் ஏற்கெனவே ஊதியவெட்டை அனுபவித்துக்கொண்டிருப்பதோடு, வேலையிழப்பு குறித்த அச்சத்திலும் இருந்துவருகின்றனர். வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் அவர்களது மொத்தச் செலவுகளும் ஒரே விகிதத்தில் இல்லை என்பதும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டுவருகிறது. குறைவான வருமானம் உள்ளவர்களாகக் கணக்குக் காட்டுபவர்களே அதிக செலவுகளைச் செய்பவர்களாக இருக்கிறார்கள் என்றாலும் அவர்களை வருமான வரி வரம்புக்குள் கொண்டுவருவது வருமான வரித் துறையினருக்கு இன்னமும் சிரமமாகவே இருக்கிறது. இந்நிலையில், மாதாந்திர ஊதியம் பெறும் வர்க்கத்தினர் மட்டும் ஊதியத்துக்கான வருமான வரி, செலவுகளுக்கான விற்பனை வரி என்று நேர்முக, மறைமுக வரிகள் இரண்டையும் சேர்த்துச் சுமக்க நேரிடுகிறது. அவர்களிடமிருந்து உத்தேச வருமானத்துக்கான வரிகளை முன்கூட்டியே வசூலித்துக்கொள்வது ஒருவகையில் வரித் திணிப்பாகவும் அமைகிறது.

தனிநபர்களிடமிருந்து வசூலிக்கப்படும் நேரடி வரிவிதிப்பு முறையானது அனைத்துக் குடிமக்களையும் சமமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். வரிச் சுமையைப் பரவலாக்காமல் குறிப்பிட்ட சிலர் மீது மட்டும் சுமத்துவது சிறந்த வரிக் கொள்கையாகவும் இருக்க முடியாது. வருமான வரிச் சட்டங்களைச் சீர்திருத்தும் வகையில், உரிய திருத்தங்களைச் செய்ய வேண்டிய நேரமிது. அதற்கான தேவையைப் பெருந்தொற்றுக் கால அனுபவங்கள் விரைவுபடுத்தவே செய்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x