Published : 07 Jan 2015 09:12 AM
Last Updated : 07 Jan 2015 09:12 AM

ஊகங்கள் மட்டும் போதாது

இந்தியக் கடல் பகுதிக்குள் ஒரு படகு தன்னைத் தானே தகர்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. எல்லோருடைய நினைவிலும் மும்பை 26/11-ஐ இந்தச் சம்பவம் நிழலாட வைத்திருக்கிறது. இந்தப் படகில் 4 பேர் வந்திருந்தார்கள் என்றும், கடலோரக் காவல்படையின் ரோந்து விமானமும் கப்பலும் தக்க நேரத்தில் அதைக் கண்டுபிடித்து விரட்டிச் சென்று கைப்பற்ற முனைந்த நேரத்தில், எந்தவிதத் தடயமும் சிக்கக் கூடாது என்று படகில் வந்தவர்கள் தங்களை அழித்துக்கொண்டு படகையும் அழித்துக் கொண்டுவிட்டார்கள் என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

கராச்சி துறைமுகத்திலிருந்து ஏராளமான வெடிகுண்டுகளுடன் 4 பேர் இந்தியக் கடல் பகுதியை நோக்கி வந்திருக்கிறார்கள் என்றும், தக்க நேரத்தில் அவர்கள் அடையாளம் காணப்பட்டதால் நம்முடைய பார்வையிலிருந்து தப்பிக்கக் கடலில் நெடுந்தூரம் சென்றிருக்கிறார்கள் என்றும், சுற்றி வளைக்கப்பட்டுவிட்டபோது வேறு வழியில்லாமல் படகையும் அழித்துத் தங்களையும் அழித்துக்கொண்டுவிட்டார்கள் என்றும் இந்திய ராணுவத் தலைமையகம் கருதுகிறது. மீனவர்களோ கடத்தல்காரர்களோ இப்படி பாகிஸ்தான் கடல் பரப்பிலிருந்து இந்தியக் கடல் பரப்புக்கு வருவது வழக்கம்தான் என்றாலும், பிடிபட்டால் கைது செய்யப்படுவதைத் தவிர வேறு எந்த ஆபத்தும் கிடையாது என்பதால் மீனவர்களும் கடத்தல்காரர்களும் சரண் அடைந்துவிடுவார்கள் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தப் படகுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று பாகிஸ்தான் மறுத்திருக்கிறது.

படகில் வந்தவர்கள் யார், அதிலிருந்த சாதனங்கள் எவை என்பதை இந்தியக் கடலோரக் காவல்படைக்குத் தெரியாமல் அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் படகில் வந்தவர்கள் செயல்பட்டுள்ளனர். படகில் இருந்தவர்கள் யாருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டனர், அவர்கள் என்ன பேசிக்கொண்டனர் என்பதையெல்லாம் கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வசதிகள் கடலோரக் காவல்படையைவிடக் கடற்படைக்கே அதிகம். அப்படி இருக்க இந்த நடவடிக்கையில் இந்தியக் கடற்படை ஏன் சேர்ந்து கொள்ளவில்லை என்று தெரியவில்லை. படகில் வந்த 4 பேரும் மீனவர்களைப் போல இல்லை என்றும் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் அந்த 4 பேரும் படகின் கீழ் தளத்துக்குச் சென்றனர் என்றும் பிறகே படகு தீ ஜுவாலையுடன் வெடித்துச் சிதறியது என்றும் கடலோரக் காவல்படை தெரிவிக்கிறது. பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட புகைப்படத்தில் அந்தப் படகைச் சுற்றி செந்தீ எரிவது தெரிகிறது. வெடிகுண்டுகளை வெடித்து படகைத் தகர்த்திருந்தால் புகை இப்படி வந்திருக்காது, வெண்மையாக இருக்கும் என்று சில நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வெடிகுண்டு வெடித்தபோது டீசல் டேங்கும் சேர்ந்து வெடித்திருந்தால் செந்தீ ஏற்பட்டிருக்கும் என்று மற்றொரு தரப்பினர் வாதிடுகின்றனர்.

இந்தியக் கடல் எல்லையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தும் நமது பாதுகாப்புத் துறையிடம் திட்டவட்டமாக ஏதும் தகவல்கள் இல்லை என்றால் என்னவென்று சொல்வது? ஊகங்களுக்கு மேல் ஊகங்களை முன்வைப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது. ஆண்டு தோறும் பாதுகாப்புத் துறைக்கும் உளவுத் துறைக்கும் மிக மிக அதிக அளவில் செலவு செய்தும்கூட இப்படிப்பட்ட சம்பவங்களை முன்கூட்டியே அறிய முடியாதது நமது தோல்வியையே காட்டுகிறது. அந்தத் தோல்விக்கு நாம் கொடுத்த விலைதான் மும்பை தாக்குதல் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x