Published : 14 Apr 2014 10:15 AM
Last Updated : 14 Apr 2014 10:15 AM

அம்பேத்கர்: சமூகநீதிக்கான போராளி

பள்ளிக்கூடத்தில் ஒரு கோணி போட்டுத் தனியாக உட்கார வைக்கப்பட்ட குழந்தைதான் டாக்டர் அம்பேத்கர். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்குச் சிற்பியாக அவர் மாறியது இந்திய ஜனநாயகத்தின் சிறப்பு. இந்திய ஒருமைப்பாட்டை அது வலுப்படுத்தியிருக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உயிரே சமூகநீதிதான் என்பது அம்பேத்கரின் மகத்தான பங்களிப்புகளுள் ஒன்று. சமூகநீதியைப் பற்றி இன்று நாம் புரிந்துவைத்திருப்பதற்கு டாக்டர் அம்பேத்கருக்குக் கடமைப்பட்டுள்ளோம்.

1840-ல் இந்தியாவில் இருந்த 15 விதமான அடிமை முறைமைகளை வில்லியம் எனும் எழுத்தாளர் பட்டியல் போட்டுள்ளார். 1843-ல் இந்தியாவில் அடிமை முறையைச் சட்ட அளவில் கிழக்கிந்திய கம்பெனி ஒழித்தது. 1931-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஒன்பது வரையறைகளை வைத்து 'தீண்டப்படாத சாதி'களைப் பிரித்தது. பார்க்கக் கூடாதவை, அணுகக் கூடாதவை, தீண்டக் கூடாதவை எனப் பல சாதிகள் ஏற்ற இறக்கமான அடிமைத்தனத்தில் வைக்கப்பட்டிருந்தன.

1950-ல் இந்திய அரசியலமைப்பு, சட்ட அளவில் தீண்டாமையை ஒழித்தது. தீண்டாமை என்பது சாதிய சமூகத்தின் விளைபொருள். சாதிய சமூக முறையை ஒழிப்பது அம்பேத்கரின் லட்சியமாக இருந்தாலும் தீண்டாமை ஒழிப்பை மட்டும்தான் அரசியலமைப்பில் அவரால் சேர்க்க முடிந்தது.

பெண் உரிமை உள்ளிட்ட அனைத்து ஜனநாயக உரிமைகளையும் நமக்கு வழங்கவே அவர் உழைத்தார். தலித் மக்களுக்கான உரிமைகள் மீட்டெடுக்கப்படுவதில் அவர் தீவிரமாக இருந்தார். அரசியலமைப்பின் மிக முக்கிய அம்சமான சமூகநீதிதான் குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்றெல்லாம் பல வடிவங்களில் வெளிப்பட்டது.

மேலும், ‘குற்றப்பரம்பரை’ மக்களுக்கான மறுவாழ்வு, கையால் மலம் அள்ளுவோருக்கான மறுவாழ்வு என்று பல முனைகளிலும் சமூகநீதி வேர்பிடித்துள்ளது. ஆனால், அவற்றின் அமலாக்கம் எப்படி இருக்கிறது?

1995 முதல் 2010 வரை ஏறத்தாழ இந்தியாவில் 1 கோடியே 50 லட்சம் வன்கொடுமைகள் நடந்துள்ளன. தலித் மக்கள் இந்திய அளவில் 1995 முதல் 2010 வரை 4,71,717 வழக்குகளையும், பழங்குடிகள் 86,386 வழக்குகளையும் தொடுத்துள்ளனர். ஆனால், எல்லா வழக்குகளுமே வன்கொடுமை சட்டத்தில் போடப்படுவதில்லை. உதாரணமாக, 2010-ம் ஆண்டில் இந்திய அளவில் 34,127 புகார்கள் அளிக்கப் பட்டுள்ளன. அவற்றில் 11,682 வழக்குகள்தான் வன்கொடுமை சட்டத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இது 34.2 சதவீதமே.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் 0.5 சதவீதத்திலிருந்து 8% பேரே தண்டனை பெறுகின்றனர். தமிழகத்தில் இது 5.2 சதவீதம்தான். 1995- 2007வரை பதிவான வன்கொடுமைகளில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது.

பாராமை, அணுகாமை போன்ற சமூகத் தீமைகள் தற்போது அரிதாகிவிட்டன. தீண்டாமை, சாதியப் பாகுபாடுகள், சாதி, வர்ண உணர்வுகள் நீடிக்கின்றன. அவற்றைக் கடக்காமல் இந்திய சமூகத்தால் ஜனநாயகத்தை அனுபவிக்க முடியாது.

அம்பேத்கரின் லட்சியக் கனவான சாதி அழித்தொழிப்பை நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். சமூகநீதியைக் கைவிடாமல் சாதி ஒழிப்பு அமலாக வேண்டும். அதுதான் அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x