Published : 31 Jul 2017 10:35 AM
Last Updated : 31 Jul 2017 10:35 AM

நிதீஷ் குமார்: தார்மிகமா, தந்திரமா?

பி

ஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதீஷ் குமார், அதே வேகத்தில் பாஜக கூட்டணியுடன் மீண்டும் முதல்வராகியிருப்பது, அம்மாநிலத்தில் நடந்துவந்த அரசியல் குழப்பங்களை ஒருவழியாக முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. ஆனால், அதன் பின்னணியில் இருக்கும் சம்பவங்கள் பல கேள்விகளை எழுப்புகின்றன.

ஊழலைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் விலகிவிட்டதாக நிதீஷ் குமார் விளக்கமளித்திருக்கிறார். ஆனால், கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தீர்ப்புக் கூறப்பட்டு சிறைக்குச் சென்றவர்தான் லாலு பிரசாத் யாதவ் என்பது 2015 பிஹார் சட்ட மன்றத் தேர்தலில் அவரது ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்தபோது நிதீஷுக்குத் தெரியாதா? உண்மையில், பாஜகவை நெருங்குவது என்று தீர்மானித்தவுடன் பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் பாராட்டினார் நிதீஷ். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக நிறுத்திய ராம்நாத் கோவிந்தையும் ஆதரித்து எதிர்க் கட்சிகளுக்கு அதிர்ச்சியளித்தார். நிகழ்ச்சியொன்றில் தாமரைப் பூவுக்கு வண்ணம் தீட்டினார். எனவே, அவரது இந்த தடாலடி முடிவு ஏற்கெனவே திட்டமிடப்பட்டதுதானோ எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது.

கூட்டணி மாற்றம் நிதீஷுக்குப் புதிதில்லை. 2013-ல் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டபோது, தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான 17 ஆண்டுகால உறவை முறித்துக்கொண்டு வெளியேறினார். ‘மதவாதத்துக்கு எதிராக’ அந்த முடிவை எடுத்ததாகச் சொல்லிக்கொண்டார். இப்போது ‘ஊழலுக்கு எதிராக’ ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை உதறிவிட்டு, மீண்டும் பாஜகவுடன் கைகோத்திருக்கிறார்.

இந்தக் கூட்டணியால் அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு உடனடியாகக் கிடைக்கக்கூடிய பலன்கள் என்று எதுவும் கண்ணுக்குத் தென்படவில்லை. லாலு பிரசாத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவருடைய கணக்கைத் தீர்த்துக்கொள்ள இப்போதைக்கு உதவியிருக்கிறது.

அதேசமயம், தனது ஆட்சியின் கீழ் இல்லாத மாநிலங்களில் அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தி, அதன் மூலம் பலன் பெறுவதைத் தயக்கமில்லாமல் செய்துவருகிறது பாஜக. வட கிழக்கு மாநிலங்களில் இந்த உத்தியைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்த பாஜக, தற்போது தேசிய அரசியலில் முக்கியமான மாநிலங்களில் ஒன்றான பிஹாரிலும் தனது தந்திரத்தைப் பயன்படுத்தியிருக்கிறது. தனது அரசியல் எதிரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, தார்மிகரீதியாகப் பின்னடைவை ஏற்படுத்தும் பாஜக, தான் ஆளும் மாநிலங்களில் ஊழல் குற்றச்சாட்டுகளைப் பொருட்படுத்துவதே இல்லை. இந்தச் சூழலில், பிஹார் ‘ஆட்சி மாற்றம்’ தேசிய அரசியலில் பெரும் சவால்களை எழுப்பியிருக்கிறது. பிஹாரில் ஏற்பட்டதைப் போன்ற மகா கூட்டணி தேசிய அளவிலும் ஏற்படும் என்றும் எதிர்க் கட்சிகளின் அணியில் மைய நாயகனாக நிதீஷ் குமார் இருப்பார் என்றும் உருவான நம்பிக்கை இப்போது தகர்ந்திருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x