

நடந்துமுடிந்த பிஹார் சட்டமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதும், மகாகட்பந்தன் கூட்டணி முன்பைவிட மோசமான தோல்வியைத் தழுவியிருப்பதும் அரசியல் களத்தில் மிகுந்த
கவனம் ஈர்க்கின்றன. 2024 மக்களவைத் தேர்தலில், பாஜக 240 இடங்களில் மட்டும் வென்று கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் ஆட்சியைத் தொடர நேர்ந்தது.
எனினும், ஹரியாணா, மகாராஷ்டிரம் தேர்தல்களில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று பலத்தை மீண்டும் அதிகரித்துக்கொண்டது. பிஹார் தேர்தலிலும் அதன் வெற்றிப் பயணம் தொடர்கிறது. போட்டியிட்ட 101 தொகுதிகளில் 89 இடங்களில் வென்று தனது பலத்தை பாஜக நிரூபித்துவிட்டது. மகாகட்பந்தன் - இண்டியா கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்திருக்கிறது. 2010 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய தோல்வி இது. காங்கிரஸுக்கு வெறும் ஆறு இடங்களில்தான் வெற்றி கிடைத்திருக்கிறது.