

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கிறது. ஆசிய அணிகளில் இச்சாதனையைப் படைத்திருக்கும் இந்திய அணியின் கிரிக்கெட் பயணத்தில் இது ஒரு மைல்கல். இந்தியாவில் ஆடவர் கிரிக்கெட் போலவே மகளிர் கிரிக்கெட் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் நிலையில், இந்த வெற்றியானது கிரிக்கெட்டில் மகளிர் நம்பிக்கையுடன் கால் பதிக்க உந்துசக்தியாகத் திகழும்.
கிரிக்கெட்டில் ஆடவருக்கான உலகக் கோப்பை தொடர் 1975இல்தான் தொடங்கியது. அதற்கு முன்பு 1973லேயே மகளிர் உலகக் கோப்பை தொடர் அறிமுகமாகிவிட்டது. ஆனால், இந்திய மகளிர் அணி 1978இல்தான் இத்தொடரில் பங்கேற்கத் தொடங்கியது. 47 ஆண்டுகளாக உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி பங்கேற்றுவருகிறது.