

யமுனை நதியைப் புனரமைக்க ரூ.1,816 கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்திருக்கிறார். 2029 மக்களவைத் தேர்தலுக்குள் இந்தப் பணி நிறைவடையும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. உத்தராகண்டில் உற்பத்தியாகும் யமுனை நதி டெல்லி, மதுரா, ஆக்ரா உள்ளிட்ட நகரங்கள் வழியாக 1,370 கி.மீ. பாய்ந்து, அலகாபாத்தில் கங்கையுடன் கலக்கிறது. இதில் டெல்லி மாநகரத்தின் மையப் பகுதிக்குள் 2% யமுனை மட்டுமே பாய்கிறது.
ஆனாலும் இங்குதான் 80% வரை இந்நதி மாசடைகிறது. இந்தப் பிரச்சினை 90களின் தொடக்கத்திலேயே உணரப்பட்டதால், ஜப்பான் சர்வதேசக் கூட்டுறவு முகமையுடன் இணைந்து யமுனை நதி செயல்திட்டம் 1993லேயே தொடங்கப்பட்டது. இப்போதுவரை யமுனையைத் தூய்மைப்படுத்துவதற்காக ஏறக்குறைய ரூ.8,000 கோடி செலவழிக்கப்பட்டிருக்கிறது.