குழந்தைகளைக் கொல்லும் மருந்துகளுக்கு முடிவுகட்டுவோம்!
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருமல் மருந்து காரணமாக உயிரிழந்திருப்பது நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. நோய் பாதிப்பிலிருந்து குழந்தைகளைக் காக்க வேண்டிய மருந்தே, உயிர் குடிக்கும் விஷமாக மாறியிருப்பது தாள முடியாத கொடுமை. அலட்சியம், முறைகேடு, விழிப்புணர்வின்மை எனப் பல்வேறு காரணிகள் இதன் பின்னணியில் இருப்பது, பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது.
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சளி, இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட குழந்தைகள், மருத்துவர்கள் பரிந்துரைத்த இருமல் மருந்தை அருந்தியதால் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் சில குழந்தைகள் உயிரிழந்தது தெரியவந்தது.
